மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவைச் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நகர எல்லைக்குள் உள்ள விளையாட்டு மைதானங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் விளையாட்டுத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மைதானங்கள் பல பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான விளையாட்டு வளங்களாக இருப்பதால் அவற்றை சரியான முறையில் பராமரித்து பாதுகாப்பது அவசியம் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக மைதானங்களின் சுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் மேம்படுத்தல் மற்றும் எதிர்காலத்தில் விளையாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநகர சபை மற்றும் பாடசாலைகள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிகமாக ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவது, விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற விடயங்களும் இக்கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர சபையின் விளையாட்டுக் குழுத் தலைவர் கருணாநிதி ஜனகன், மாநகர சபையின் விளையாட்டுக் குழு உறுப்பினர்கள், நகர எல்லைக்குள் உள்ள பல பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இவ்வாறு நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இத்துறையை வளர்ச்சியடையச் செய்ய மாநகர சபை தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.











