பல்வேறு நபர்கள் ஆயுர்வேத மருத்துவ சபை என்ற பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் தமது நிறுவனப் பெயர்களைப் பயன்படுத்தி வருவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத அல்லது சுதேச வைத்தியர்களாக முறையான தகைமை பெறாத நபர்களைப் பதிவு செய்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், சிகிச்சை நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றின் ஊடாக மோசடியான முறையில் பணம் ஈட்டும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் சுதேச வைத்திய முறைகளில் ஈடுபடுவதற்கு வைத்தியர்களுக்குச் சட்டபூர்வ அதிகாரத்தை வழங்கும் ஒரே நிறுவனம் ஆயுர்வேத மருத்துவ சபை மாத்திரமே ஆகும்.

பொதுமக்கள் ஆயுர்வேத அல்லது சுதேச சிகிச்சைகளைப் பெறும்போது, சம்பந்தப்பட்ட வைத்தியர் சட்டபூர்வமான தகைமையைக் கொண்டவரா என்பதை ஆயுர்வேத மருத்துவ சபையூடாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத/ பாரம்பரிய/ சுதேச வைத்தியர்களாகத் தோன்றி சிகிச்சை அளிக்கும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்துத் தகவல் கிடைத்தால், அது குறித்துத் தமக்கு அறிவிக்குமாறு ஆயுர்வேத மருத்துவ சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடி நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது நபர்களுக்கு எதிராக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் கீழ் (2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம்) சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112 844 9666 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.








