இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions) ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் பலமுறை இத்தகைய கொத்துக் குண்டுகளை இஸ்ரேலிய பொதுமக்கள் வாழும் பகுதிகளை நோக்கி ஏவியுள்ளதாகவும், இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் பாரிய போர்க்குற்றமாக கருதப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கிளஸ்டர் குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் வானில் வெடித்து, அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய வெடிபொருட்கள் பரவி விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை குண்டுகள் சில சமயங்களில் உடனடியாக வெடிக்காமல், பின்னர் நிலக்கண்ணி வெடிகளைப் போல செயல்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நீண்டகால ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய இஸ்ரேல் பகுதிகளில் இத்தகைய ஏவுகணைத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.








