வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றது.
INSIV Global நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் பணிப்பாளர் சூரியமூர்த்தி ஹரீந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள கிரீன் கார்டன் மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றது.
வெளிநாடுகளில் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கல்வி கண்காட்சியில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
INSIV Global நிறுவனம் வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பல வருட அனுபவத்துடன் முற்றிலும் இலவச விசா சேவைகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை வழங்கி வரும் நம்பகமான நிறுவனமாகும்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி உயர் கல்வி, பட்டப்படிப்பு, முதுமாணி மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான Edu Expo நிகழ்வில், வெளிநாடுகளில் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் விளக்கங்களை வழங்கியதுடன், குறிப்பாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் Study Reach பல்கலைக்கழக இணைப்பின் நாட்டுப்பணிப்பாளர் மேரியா ரிச்சட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான மேலதிக விளக்கங்களை வழங்கினார்.
INSIV Global நிறுவனம் தற்போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனது கிளைகளை விரிவுபடுத்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் வெளிநாட்டு உயர்கல்வி கனவுகளை நனவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சட்டத்தரணி திருமதி தர்ஷினி சுந்தரேசன் கலந்து கொண்டதுடன், வங்கி முகாமையாளர்கள், நிறுவன அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.










