ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.
வடகொரிய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமைதியை பாதித்து உலகளவில் பதற்றத்தை அதிகரிக்கும் சட்டவிரோத இராணுவ நடவடிக்கை என விவரித்துள்ளார்.
இந்த தகவலை வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் Korean Central News Agency வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானின் அரசியல் அமைப்பில் வெளிநாட்டு தலையீடு நடைபெறக்கூடாது என்றும், மற்றொரு நாட்டின் அரசை பாதிப்புக்குள்ளாக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஈரானின் நிபுணர்கள் சபை புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்த முடிவை ஈரான் மக்களின் உரிமை மற்றும் தெரிவு என மதிப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
அதே சமயம் ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பெயரிடப்பட்டார்.
ஈரானிய மக்களின் இந்தத் தெரிவை வடகொரியா ஆதரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








