பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16), “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தொரண சந்தை மற்றும் பேலியகொட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது இடம்பெற்றது.
இதன்போது, விபச்சார விடுதிகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் 28 வயதுடைய ஆண் ஒருவரும், ஒரு பெண்ணும், மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் களனி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்கள் லுணுகலை, மொரட்டுவ, தல்பே, முல்லெடியாவ, தெஹிகல்பிட்டிய, நாமல்கமுவ மற்றும் கல்நேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








