ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (19) நீதிமன்றத்தில் அறிவித்தது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஏர்பஸ் இலஞ்ச விசாரணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வௌியானது.
இந்தச் சமர்ப்பணத்தின்படி, குறித்த 60 மில்லியன் ரூபா மூன்று சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மேலும் 20 மில்லியன் ரூபா முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சந்திரசேனவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்திரசேன முன்னதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








