மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொத்தியாபுலையில் நேற்றைய தினம் (19) காணாமல் போன பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குத்துயிராக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை குறித்த பகுதியினூடாக பால்பண்ணைக்குச் செல்லும் சிலர் குறித்த பொதுக் கிணற்றினுள் இருந்து அலறல் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் அரைஉயிரில் கிடப்பதை அவதானித்து பொலிஸ் அவசர பிரிவிற்குத் தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு வந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் குறித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த கிணற்றினுள் இன்னுமொரு சடலம் இருப்பதும் அறியப்பட்டு, குறித்த சடலத்தை மீட்கும் நடவடிக்கை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் கொத்தியாபுலையில் வைத்து தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு குறித்த கிணற்றினுள் போடப்பட்டதாகவும், கிணற்றினுள் இன்னுமொருவரின் சடலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் கிணற்றினுள் இருக்கும் மற்றுமொரு சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை பகுதியில் காணாமல் போன பெண் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








