மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பகுதியில் இன்று (21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முடித்துவிட்டு வந்த ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை, காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மண்டூர் நோக்கி சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் பின்னால் மோதியுள்ளது.
இந்த மோதலினால் இரு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








