அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் இல்லை, அதற்கு மேல் அரசாங்கம் விலைகளையும் அதிகரித்துள்ளது. ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது’ போன்ற நிலையே இது. முச்சக்கரவண்டி கட்டணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 20 ரூபாயை அதிகரிக்குமாறு நாங்கள் முன்மொழிகிறோம். மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். நிலவும் நிலைமை குறித்துத் தெரிவிப்பதற்காக விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.








