இந்தியா மிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஈரானிய கப்பல் விவகாரத்தை கையாண்டது. ஆனால் வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை அப்பட்டமாக தற்போது வெளிவருவதாக மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் முதல் ஈரான் கப்பல் IRIS Dena தாக்க படுவதற்கு முன்னமேயே, மூன்றாம் கப்பல் கொச்சின் துறைமுகத்தில் தரித்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இலங்கை அரசு, முதல் கப்பல் IRIS Dena, நமது கடல் பரப்புக்கு உள்ளே வர அவசர அனுமதி கோரிய போது, உடனே பதில் அளிக்காமல் தடுமாறியது வாஸ்தவம் தான்.
“அமெரிக்கா கோபிக்குமோ” என இவர்கள் அமெரிக்கரின் அபிப்பிராயத்தை நாட முயன்றது என்னமோ உண்மைத்தான். ஆனால், அந்த இடைவெளி நேரத்தை பயன்படுத்தி சுமார் 80-கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து அமெரிக்க நீர்மூழ்கி, முதல் கப்பலை தாக்கி அழித்தது.

வெளியுறவு கொள்கையில், இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை அப்பட்டமாக வெளிப்பட்ட தருணம் இதுவாகும்.
இந்த நெருக்கடி வேளையில், அமெரிக்காவை நாடியதை விட பிராந்திய வல்லரசு மற்றும் இந்த போர் பயிற்சியை நடத்திய இந்தியாவின் அபிப்பிராயத்தை, இலங்கை அரசு கோரி இருக்க வேண்டும்.
அது நிகழ்ந்து இருந்தால், ஏற்கனவே மூன்றாம் ஈரானிய கப்பலுக்கு தாம் “அனுமதி” வழங்கி விட்டோம் என்ற இந்திய செய்தி இலங்கைக்கு கிடைத்து இருக்கும். இந்தியாவை சாட்டி, முதலாம் கப்பலை அவசரமாக உள்ள வர இலங்கை அனுமதித்து இருக்கலாம். மாலுமிகளுடன் ஈரானிய கப்பலும் தப்பி இருக்கும்.
இந்த நிகழ்வு இப்போது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் தெரியும். அவர்கள் நண்பர்கள். இந்தியாவுடன் இன்று அமெரிக்காவும், ரஷ்யாவும், ஏனைய அரபு நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் நட்புடன் இருக்கின்றன.
இந்தியாவின் நிழலில் இலங்கை கரை ஏறலாம். ஏறி இருக்கலாம். இந்தியாவுக்கு இலங்கையின் நட்பு தேவை. அந்த முதிர்ச்சியும் நாம் பயன்படுத்தி இருக்கலாம். எதையும் இலங்கை செய்யவில்லை.
இலங்கை அரசின் முதிர்ச்சியற்ற வெளியுறவு கொள்கையின் உச்ச கட்டம் எது தெரியுமா?

கடந்த வெள்ளியன்று, பாராளுமன்றம் வந்த அனுர குமார நாவடக்கம் இல்லாமல் அடித்த முதிர்ச்சியற்ற கதை. “அமெரிக்கா கோரிக்கை விடுத்தும், நான் மத்தள விமான தளத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை” என்ற கதை தான்.
இது உண்மையாக இருக்கலாம். ஆனால், மூர்க்க யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு உலக வல்லரசு பற்றி இப்படி பாராளுமன்ற சபையில் பகிரங்கமாக சொல்லலாமா? தன்னை “வீரனாக” காட்டிக்கொள்வதற்காக அவசர பட்டு விட்டாரே, அனுர!
குறைந்த பட்சம், ஜனாதிபதி தனது சபை உரையின் பிறகு நடத்திய கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் மட்டும், அவசியமானால் இதை கூறி இருக்கலாம். ஆனால், பகிரங்கமாக கூறி, அவமான படுத்தி அதன் எதிர் விளைவுகளை சந்திக்க தயார் ஆகி விட்டாரோ? ஜனாதிபதி அனுரவின் நண்பி முன்னாள் தூதுவர் ஜூலி சங்குத்தான் வெளிச்சம்..!
“ஒரேயொரு முட்டை போட்ட கோழி கத்தி, பம்போரி அடித்து, ஊரை கூட்டுமாம். ! நூறு முட்டை போட்ட ஆமை அமைதியாக நகருமாம்..! முதிர்ச்சி என்பது எத்துணை அவசியம் என்பதை காலம் தான் புரிய வைக்கும்.” என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.








