ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்த்தரப்பில் இருந்தபோது போன்றே தற்போதும் மக்களுக்கு கதை கூறி வருகிறார். நிலக்கரி மோசடியை முடிமறைத்து திருடரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். குறித்த நபரை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளும் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று (01) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தான் ஜனாதிபதியானதும் திரையரங்குகளுக்கான வரிசை மாத்திரமே உருவாகும். எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசை உருவாகாது’’ என்று 2024ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ஆம் திகதி கூறியிருக்கிறார்கள். அதாவது திரைப்படம் பார்க்கவும் நாடகம் பார்க்கவும் மாத்திரமே வரிசைகள் இருக்கும். அப்படியென்றால், அநுரகுமார எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திரைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதனை கண்டுகளிக்கவே அத்தனை மக்களும் நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைக்கட்டியிருந்துள்ளார்கள். இன்னும் சிலநாட்களாகும்போது வேறு வேறு இடங்களிலும் இந்த திரைப்படங்களை காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நெருக்கடி நிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை நிகழ்த்தியிருந்தார். அதில் அவர் நிலக்கரி மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திலோ, இலஞ்ச ஊழல் திணைக்களத்திலோ இதுதொடர்பில் முறைப்பாடு இல்லை என்று குறிப்பிட்டார். அநுர மக்களுக்கு பெரும் பொய்யைக் கூறி ஏமாற்றுகிறார்.
அதன் பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அமைச்சர் குமார ஜெயகொடி மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. அதிகாரி குமார ஜெயகொடி மீதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியிலிருந்தபோது சுழலவிட்ட கதையை ஜனாதிபதியாக இருந்துகொண்டு சுழலவிட முயற்சிக்கிறார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறார். அதாவது, குமார ஜெயகொடி அமைச்சர் இல்லையாம். அதிகாரியாம்.
எந்தவொரு மனச்சாட்சியும் இல்லாமல் நிலக்கரி மோசடி, சம்பந்தப்பட்ட திருடரையும் அநுரகுமார திசாநாயக்க பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். இவரை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளும் பாரிய நெருக்கடி இருக்கிறது என்பதை நாங்களும் அறிவோம்’’ என்றார்.








