பிபிலை – மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட ‘கல்கட்டஸ்’ (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம பொலிஸாரால் கடந்த (06) ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் மஹியங்கனையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கி ‘தொதல்’ இனிப்பு பண்டங்களை ஏற்றி சென்ற நிலையில் மெதகம 8 ஆம் கட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, தொதல் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்றும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் செல்லக்கதிர்காமம் பகுதியில் தொதல் வியாபாரத்தில் ஈடுபடும் 62, 35 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களையும் சான்றுப் பொருட்களையும் பிபிலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரவீர ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் சுனில் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.








