ஈரானின் “முழு நாகரிகத்தையும் அழிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையானது, “ஒழுக்க ரீதியில் கண்டிக்கத்தக்கது மற்றும் சட்ட ரீதியாக நியாயப்படுத்த முடியாதது” என டப்ளின் திரித்துவக் கல்லூரியின் சர்வதேச மனித உரிமைகள் சட்டப் பேராசிரியர் மைக்கேல் பெக்கர் (Michael Becker) தெரிவித்துள்ளார்.
முன்னர் சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பேராசிரியர் பெக்கர், ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகள் பாரிய அளவிலான யுத்தக் குற்றங்களை முன்னெடுப்பதற்கான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் சிவிலியன் மக்கள் தொகைக்கு எதிராக இத்தகைய தாக்குதலை நடத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும்” என்ற ட்ரம்ப்பின் சமூக ஊடகப் பதிவு, ஒரு இனப்படுகொலை நோக்கத்தைப் பிரதிபலிக்கிறதா என வகைப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஏனெனில், அப்படி நடப்பதை தான் விரும்பவில்லை” என்றும் ட்ரம்ப் அதே பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த அலைபாயும் மொழி இனப்படுகொலை சார்ந்ததா என்பது இங்கே முக்கியமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் கூற்று தெளிவான சட்டவிரோத ஆக்கிரமிப்பு மிரட்டலாகும். இது ஈரானிய பொதுமக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட குற்றவியல் தாக்குதலையே எதிர்வுகூறுகின்றது.
இத்தகைய அவமானகரமான கருத்துக்களை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் நிபந்தனையின்றி கண்டிக்க வேண்டும்” என பேராசிரியர் மைக்கேல் பெக்கர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.








