வத்திக்கான் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மோதல், இன்று உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
The Free Press ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கொள்கைப்பிரிவு துணைச் செயலாளர் எல்ப்ரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), வத்திக்கான் அமெரிக்கத் தூதரான கார்டினல் கிறிஸ்டோபர் பியர் (Cardinal Christophe Pierre) என்பவரைப் பென்டகனுக்கு வரவழைத்து ஒரு இரகசியச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
“இந்த உலகில் தான் விரும்புவதை எதையும் செய்வதற்கு அமெரிக்காவிற்கு இராணுவ பலம் உள்ளது. எனவே, கத்தோலிக்க திருச்சபை அமெரிக்காவின் பக்கம் நிற்பது அதற்கு நல்லது” என்று கோல்பி நேரடியாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 9 அன்று போப் 14-ஆம் லியோ (Pope Leo XIV) ஆற்றிய உரையில், அமெரிக்காவின் ‘டான்ரோ கோட்பாட்டை’ (Donroe Doctrine) மறைமுகமாக விமர்சித்து, “சமாதானத்திற்குப் பதிலாக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது ஆபத்தானது” என்று கூறியதே இந்தப் கோபத்திற்கு அடிப்படைக் காரணமாகும்.

இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க அதிகாரிகள் ‘அவிக்னான் பாப்பசி’ (Avignon Papacy) காலத்தை நினைவூட்டியதாகக் கூறப்படுகிறது.

14-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மன்னன் பிலிப், திருச்சபையைத் தனது விருப்பத்திற்கு வளைத்து, போப்பாண்டவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு இருண்ட காலமே இதுவாகும்.
“நாங்கள் நினைத்தால் உங்களை எங்களது இராணுவ பலத்தின் மூலம் அடிபணிய வைக்க முடியும்” என்பதையே பென்டகன் இதன் மூலம் குறிப்பாகச் சொல்ல வந்துள்ளதாக வத்திக்கான் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாட வரவிருந்த போப்பாண்டவரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இன்று தெரிவித்துள்ளார். இருப்பினும், பென்டகன் இந்தச் செய்திகளை “திரிக்கப்பட்டவை” என்று மறுத்துள்ளது.
தெய்வீக அதிகாரத்திற்கு எதிரான இந்த இராணுவ மிரட்டலானது தற்போது அமெரிக்கா மற்றும் வாடிகன் இடையிலான உறவு அதன் வரலாற்றிலேயே மிகக் கீழான நிலைக்குச் சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆன்மீகத் தலைவரான போப்பாண்டவரை ஒரு இராணுவ வல்லரசு பகிரங்கமாக மிரட்டியிருப்பது, உலக அரசியலில் ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரத்தின் மீதான ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகும். வான்ஸ் கூறுவது போல இது ஒரு தவறான புரிதலா அல்லது நவீன கால ‘அவிக்னான்’ முயற்சி தானா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.








