இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 ஏப்ரல் 19-20 தேதிகளில் ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வார் என இலங்கை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
இலங்கை இந்திய தூதரகம் நேற்று (17) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவைச் சந்திப்பார். அதனை தொடர்ந்து பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியத் தலைவர்களையும் சந்திப்பார்.
அதேவேளை இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கியப் பங்காளியாக விளங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து பிரதி ஜனாதிபதி அவர்களின் இலங்கை பயணம் அமைந்துள்ளதுடன் இந்தியாவையும் இலங்கையையும் பிணைக்கும் பல்லாயிரம் ஆண்டு கால பழமையான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் டின அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதியில் மொரகஹஹேன பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் தனது வளர்ப்பு நாய்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகக் கூறி அந்தப் பெண் தனது அண்டை வீட்டாரிடம் அதனை நிறுத்துமாறு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார் அந்தப் பெண்ணைத் தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் காணொளி எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது.
காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய வேல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹோரண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.









