இன்றைய காலகட்டம் மாணவர்களுக்கு ஒரு சவால்நிறைந்த காலகட்டமாக மாறியுள்ளதாகவும், அதில் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும், குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் நேற்று (20) மாலை வழங்கிவைக்கப்பட்டன.
“சமூகங்களை இணைத்தல் – அமைதியை கட்டியெழுப்புதல்; மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்” என்ற திட்டத்தின் கீழ், சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும் யுனோப்ஸ் மற்றும் விருத்தி அமைப்பின் பங்களிப்பிலும் இவை வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதி மாணவிகளுக்கும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள தமிழ்–முஸ்லிம் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்குமான உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்போது 38 மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்களும், 16 குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்–முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும், அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதன் போது உரையாற்றிய உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதாகரன், இது சவால் நிறைந்த உலகம் என்பதையும், இந்த நாட்டை அல்லது இந்த பிரதேசத்தை வழிப்படுத்தப்பட வேண்டியவர்கள் எதிர்காலத்தில் நிற்கும் முக்கிய தூண்கள் மாணவர்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

பெண் பிள்ளைகள் தற்போதைய பொருளாதாரச் சுமை, காலச் சூழல் மற்றும் இலத்திரனியல் யுகம் போன்ற பற்பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் கல்வியின் மூலம் இலக்கை நோக்கி முன்னேற வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “நீங்கள் ஒரு கண்ணாடிப் போத்தல் போன்றவர்கள்; அது உடையாமல் இருக்கும் வரை அதன் பெறுமதி நிலைத்திருக்கும்” எனவும் எடுத்துரைத்தார்.
தங்கள் இலக்கை அடைந்து, சமூகத்தில் தாய் தகப்பனுக்கு நிலையான மதிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், பின்தங்கிய நிலைக்கு காரணங்களை அறிந்து அதிலிருந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அன்னை தெரேசா போன்றோர் உலகத்திற்கு வழிகாட்டியதுபோல், இப்பகுதியிலிருந்து மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு தாய் தனது பிள்ளை உயர்ந்த நிலையை அடையும் போது பெறும் ஆனந்தக் கண்ணீர் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய கொடை எனவும், நல்லொழுக்கமிக்க மாணவர்களாக வளர்ந்து சமூகத்திற்கு பெயர் பெற்றவர்களாக மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய உதவிகள் போல, எதிர்காலத்தில் உதவி பெறும் கையாய் அல்லாமல், உதவி வழங்கும் கையாய் மாற வேண்டும் என்றும், கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், நாட்டில் போதைப்பொருள் பாவனை ஒரு பெரிய சவாலாக உள்ளதாகவும், மாணவர்கள் அதிலிருந்து விலகி இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். யாரையும் நம்பி எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்றும், குடும்பத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இந்த பிரச்சினையில் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் சமூக மட்டத்தில் பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். வீடு பாதுகாப்பானால் தான் கிராமம், பிரதேசம் மற்றும் மாவட்டம் பாதுகாப்படையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நண்பர்கள் அல்லது சக மாணவர்களில் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால், அவற்றை பெற்றோர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வழங்கப்படும் உதவிகள் இலவசம் என்பதற்காக அவற்றை மதிப்பின்றி பயன்படுத்தக் கூடாது என்றும், அவை ஒருவரின் உழைப்பின் பலனாக கிடைத்தவை என்றும் அவர் நினைவூட்டினார்.
எதிர்காலத்தில் குடும்பங்கள் கையேந்தாத நிலைக்கு வர வேண்டும் என்றும், அதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் எந்த நேரமும் அலுவலகத்தை அணுகி தங்கள் பிரச்சினைகளை பகிரலாம் என்றும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றங்களை நேர்மையாக சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், தேவையற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் இறுதியாக தெரிவித்தார்.











