ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் இன்று பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி முதல்வர் தி. டினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் நடைபெற்றன. மேலும், முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோர் நினைவுரைகள் வழங்கினர்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது காணப்பட்டது.


















