களுவாஞ்சிக்குடியில் மிளகாய் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவசாயி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) காலை மிளகாய் செய்கை தோட்டமொன்றில் 68 வயதுடைய விவசாயி காசிநாதன் ஜெயகாந்தன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (21) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரை உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் எந்தவித தடயங்களும் விடாமல் தப்பிச் சென்ற மர்ம நபரை கண்டறிய பொலிசார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.








