ஒரு கொடூரமான, இரக்கமற்ற செயலில், தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அப்பாவி மக்கள் பலியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கும் மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இருதயபுரம் சேமக்காலையில் அமைந்துள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாகும் என்றும், ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன என்றும் கூறினார். இதனால், அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றார்.
அரசியல், இன, மத வேறுபாடுகளை தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சினையை அணுகுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். மத வழிபாட்டிற்காக சென்ற அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரமானது என்றும், அதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் தவிர்க்கப்படலாம் என்றும், நீதி தாமதமாகும் போது மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் விரைவாக கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
இறுதியாக, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்தார்.








