தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் திடீரென உயிரிழந்துள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இங்கு இந்திய பாராளுமன்றத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான காட்சிகள் படமாக்கப்படவிருந்தன. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (21) படப்பிடிப்புத் தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராக இருந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த கலைஞரான அழகர் கருப்புசாமி போஸ் என்பவர் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திடிர் மாரடைப்பே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மாத்தளை, களுதாவலை இரத்தோட்டை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் திருமணமாகாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








