வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் – தோட்டவெளி வழித்தடத்தில் சேவை சீரற்றுக் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடு கிடைத்தது.
இதனை அடுத்து மன்னார் சாலை முகாமையாளருக்கு உடனடி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சேவை சீராக நடைபெறாவிட்டால் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – ஓமந்தை பேருந்துகள் காலதாமதமாக செல்வதால் மாணவர்கள் முதல் பாடவேளையை தவறவிடும் நிலை ஏற்பட்டதாக முறைப்பாடு வந்தது.
இதனை அடுத்து காலை 7.25 மணிக்குள் பாடசாலையை வந்தடைவதை உறுதி செய்யுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குப்பிளான் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையில் ஏழாலை மேற்கு மக்கள் முன்வைத்த கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து சேவை தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் அதிகார சபையின் கவனத்துக்கு கொண்டுவரலாம் என தலைவர் தெரிவித்துள்ளார்.








