மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் மோட்டர் சைக்கிள்களை குறிவைத்து அந்த மோட்டார் சைக்கிள்களின் போலியாக தயாரிக்கப்பட்ட சாவிகளை கொண்டு திறந்து, அதில் இருக்கும் கையடக்க தொலைபேசி மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வவுணதீவைச் சேர்ந்த திருடனை எதிர்வரும் எதிர்வரும் 08 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.
கடந்த 24 ம் திகதி காந்தி பூங்காவுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மக்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருந்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர்சைக்கிள் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இளைஞன் ஒருவர் உலாவிக் கொண்டிருந்தபோது அவரை அங்கு இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த இளைஞன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து கையடக்க தொலைபேசி மற்றும் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிசாரிடம் ஒப்பு கொண்டதையடுத்து வவுணதீவில் இருக்கும் அவனது வீட்டிற்சென்று கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றை மீட்டதுடன் 9 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை அன்று பொருட்களுடன் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 8ம் திகதி வரை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை மட்டக்களப்பு நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினுள் வைக்கப்பட்டிருந்த 24 கிராம் தங்க ஆபரணம் , மற்று 3 கையடக்க தொலைபேசிகள் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








