மொனராகலை, வெல்லவாய – சிறிபுர பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(3.5.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
மேற்படி மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள பௌத்த அறநெறிப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும், மகளும் உடனடியாக அந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








