புத்தளம் அட்டவில்லுவ பகுதியில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமானதாக கூறப்படும் காணியில், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் துப்பாக்கி ரவைகள் மற்றும் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குருநாகல் ரிதிகல கருவலகஸ்வெவ பகுதி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும், புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, பதப்படுத்தப்பட்ட ஒரு பெரிய சிறுத்தை தோல், புள்ளிமான் தோல் ஒன்று மற்றும் 9 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அந்த காணியை முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வனவிலங்கு அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோல் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய சிறுத்தையுடையது எனவும், இவ்வகை விலங்குகள் பொதுவாக வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணியின் உரிமையாளரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரை விசாரணைக்காக அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிதிகல வனவிலங்கு பிரிவு முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை, பிராந்திய உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








