தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது கவலைக்குரியதாகும் எனவும், அவர் நாட்டின் ஜனாதிபதியா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா என்ற கேள்வி எழுகின்றதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி கருத்துரைப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில் அரசு தாமதம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.
வரி வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டதன் விளைவாக மக்கள் வறுமையின் உச்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், முதியோரின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கடமையை அரசு புறக்கணித்து தொடர்ந்தும் செயல்பட்டால், மாற்று ஆட்சியாக எதிர்க்கட்சி மக்களுக்காக வீதியில் இறங்கி போராடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மக்களுக்கு உடனடி வரி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








