தமிழ்நாடு கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தி.மு.க. தொண்டரான இவர், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தி.மு.க. மீது அதிக பற்றுக்கொண்டிருந்த ஆறுமுகம், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததாக நினைத்து கடும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சில்வஸ்டார் (70), மாநகராட்சி 26-வது வார்டின் தி.மு.க. அவைத்தலைவராக இருந்தார். கடந்த 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது, மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது, அருகில் இருந்தவர்களிடம், “தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறி வருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை சில்வஸ்டாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.








