தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இன்னும் உறுதியாக இல்லை என நம்புவதால், தவெக தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தவெகுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், மேலும் சில கட்சிகளும் ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆட்சி அமைக்க தேவையான ஆதரவைப் பெற விஜய்யின் கட்சிக்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று ஆளுநரை சந்தித்த விஜய், அடுத்த அரசை அமைப்பதற்கான உரிமையை கோரியிருந்தார். மேலும், தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் சட்ட ஆலோசகர்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு, 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட குறைந்தது 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸின் 5 இடங்கள் சேர்க்கப்பட்டபின், விஜய் வென்ற இரு தொகுதிகளில் ஒன்றை விலக்கி கணக்கிட்டதால், ஆதரவு எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டியுள்ளது.
காங்கிரஸைத் தவிர, சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் யார் யார் தவெக அணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இரண்டு இடங்களை வென்ற விசிக, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று சென்னைையில் சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இடதுசாரி கட்சிகள் முடிவெடுக்க மே 8 வரை அவகாசம் கோரியுள்ளதால், அந்த சந்திப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன.

தேர்தல் முடிவுகளில் திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், பாமக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மேலும், ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஐ(எம்) ஆகியவை தலா 2 இடங்களையும் பெற்றுள்ளன. பாஜக, தேமுதிக மற்றும் மற்றொரு கூட்டணி கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுக இணைந்து மாற்று அணியை உருவாக்கலாம் என்ற அரசியல் யூகங்களும் நிலவுகின்றன. அதிமுகவின் 47 உறுப்பினர்களில் குறைந்தது 30 பேர் திமுகவிற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தவெகவை ஆதரிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் பிரிவுக்கு, கட்சியின் மத்திய தலைமை முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி அமைப்பதை விட, “மதச்சார்பற்ற அரசு” உருவாகுவதை ஆதரிப்பதே சிறந்தது என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.








