யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தாம் கூறியதாக வெளியான செய்திகள், தனது தமிழ் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக உருவானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே கைச்சாத்திடப்பட்டதாக கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களை விமர்சிக்கும் வகையிலேயே தாம் அந்த கருத்தை நகைச்சுவைத் தொனியில் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் எதையும் கூறவில்லை என்றும், நாட்டை நேசிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“நான் எனது நாட்டை விற்க மாட்டேன். இந்த நாட்டிற்காக போராடியவர்கள் நாங்கள். இலங்கை எனது நாடு,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அந்த கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் எல்லாவற்றையும் மோடிக்கு வழங்கப் போகிறதானால், அத்தகைய ஒப்பந்தங்களை ஆதரிப்பவர்கள் மோடியிடமே செல்லலாம்; மற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








