தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறோம் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், ஆட்சியமைப்பது குறித்து விஜய் அளித்த விளக்கங்களில் ஆளுநருக்கு திருப்தியில்லை எனவும், எனவே தற்போதைக்கு பதவியேற்க அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 112 பேர் ஆதரித்த நிலையில் மேலும் 6 பேர் யார் ஆதரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? ஆட்சியமைத்தால் கவிழாது என உறுதியளிக்க முடியுமா? என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என தவெக தொண்டர்கள் ஆளுநர் மாளிகை வெளியே பாதகைகளை ஏந்தியபடி நின்ற வண்ணம் உள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தவெக தொண்டர் செல்வம், “தவெக தலைவருக்கு மக்கள் பெரும்பான்மை கொடுத்துள்ளார்கள். அதனை ஏற்று ஆளுநர் ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். தடையை ஏற்படுத்தக் கூடாது” என கூறினார்.








