கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் மின்கலத்தை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
காலி – வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்ததும், தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்த 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணையை வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகே மேற்கொண்டார்.
விசாரணையின் போது சாட்சியமளித்த சிறுவனின் தந்தை, பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டிருந்த கைக்கடிகார மின்கலத்தை தனது மகன் தவறுதலாக விழுங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வைத்தியரின் ஆலோசனைப்படி எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலையிலும் அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய தேசிய வைத்தியசாலையிலும் சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
அங்கு அறுவை சிகிச்சை மூலம் மின்கலம் அகற்றப்பட்டதுடன், சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் அவனுக்கு முதுகுவலி, வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் இருந்தபோது சிறுவன் இரத்த வாந்தி எடுத்ததால் மீண்டும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யு.டி.ஏ. திஸாநாயக்க மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில், குடலின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான இரத்த நாளம் சேதமடைந்ததால் ஏற்பட்ட உட்புற இரத்தப்போக்கே மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.








