தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, புதிய அரசு அமைப்பதற்காக பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கூடுதல் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடம் விஜய் ஆதரவு கோரியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டங்களின் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விஜய்க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தனது ஆதரவை அறிவித்துள்ளன.
இதன் மூலம், 120 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது.








