தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக “குஷ்” ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிதி முகாமையாளராக பணியாற்றி வந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமானத்தின் மூலம் நேற்று இரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கைப்பை தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அந்தச் சோதனையின் போது, கைப்பைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் “குஷ்” ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








