இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கப்பல் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை சென்றடைய வேண்டியிருந்த நிலையில், கடலில் நிலவிய மோசமான வானிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக பயணம் பல மணி நேரம் தாமதமானது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 144 பயணிகளுடன் பயணித்த கப்பல், நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கள்ளார் பகுதியில் சென்றபோது திடீரென இயந்திரப் பழுதுக்கு உள்ளானது.
இதையடுத்து இந்திய அதிகாரிகளும் உள்ளூர் மீனவர்களும் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கப்பல் பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை அடையச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் பயண வசதிகளையும் வலுப்படுத்தும் நோக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








