மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்குதல், மணல் அகழ்வு உரிமங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மணல் விலையை கட்டுப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்கள் இடையே நேற்று (10) மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இனி மணல் அகழ்வு உரிமங்கள் புதிய விதிமுறைகளின் கீழ் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மணல் வர்த்தகர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைத்ததாக கூறினார்.
மணல் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், வறிய குடும்பங்கள் வீடுகள் அமைப்பதற்காக 3 கியூப் மணலை 50 ஆயிரம் ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்காக 3 கியூப் மணலை 65 ஆயிரம் ரூபாவிற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மணல் கொண்டு செல்லும் போது ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபாய் வரை கட்டண உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், மணல் அகழ்வு உரிமங்களை வழங்கும் நடைமுறையில் புதிய சட்ட விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுவருவதாகவும், மாவட்ட செயலாளரின் இறுதி தீர்மானம் மற்றும் மேற்பார்வையின் கீழ் உரிமங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மற்றும் புவியியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மணல் அகழ்வு உரிமங்களை வழங்கும் நடைமுறையில் ஒழுங்குமுறை ஏற்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.








