அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை கடந்த சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் “கடற்குதிரை” எனப்படும் நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், மற்றொருவரிடமிருந்து 20 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80,000 ரூபாய் பணம், மின்னணு தராசு மற்றும் நவீன கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.








