ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறிய இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான குழுவினர் பிரதேசத்தில் உள்ள 14 இரவு நேர உணவகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உணவு தயாரிப்பு முறை, சமையலறை சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்கள் சேமிப்பு நிலை ஆகியவை தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
சுகாதார விதிமுறைகளை மிக மோசமாக மீறி செயல்பட்ட இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் இருந்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ். ஜீவராஜா உள்ளிட்ட ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றனர்.
அதேவேளை, உணவக உரிமையாளர்களுக்கு தரமான உணவு வழங்குதல் மற்றும் சமையலறை சுகாதாரத்தை பேணுதல் தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.








