மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்றுடன் 966 நாளை கடந்துள்ள நிலையில் அவர்கள் மேச்சல் தரையில் தற்போது எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பொன்றினை சித்தாண்டியில் நேற்று (10) ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு கால்நடை பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சீ.நிமலன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தலைவர் மட்டக்களப்பிற்கு வருகை தரவுள்ள ஐனாதிபதி தங்களையும் சந்தித்து தங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் அத்துடன் தாங்கள் நீண்ட காலமாக எதிர் நோக்கி வரும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதுடன் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து தருமாறும் பண்ணையாளர்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தற்போது குறித்த பிரதேசத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் உட்பட்ட குழுவினர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பெரும்பான்மை மக்களின் நலன் கருதி குடியிருப்பு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் இதனால் மீண்டும் அப் பிரதேசத்தில் வழமைக்கு மாறான அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாகவும் இந்நிலை இடம் பெறுமானால் மேய்ச்சல் தரை பிரதேசம் பறிபோகும் நிலையுடன் எதிர் காலத்தில் கால்நடைகளுக்கு உணவின்றி போகும் அபாய நிலை ஏற்பட்டவுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இனமத பேதமின்றி நல்லதொரு தீர்வு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.










