யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களையும் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உர விநியோக செயல்முறையை விரைவுபடுத்தி விவசாயிகளுக்கு இடையூறு இல்லாமல் உரத்தை வழங்கும் நோக்கமே அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக தவறான மாயையை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது நாட்டில் போதுமான அளவு உரம் இருப்பதாகவும், பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் அரசாங்கத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் துஷார விக்ரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.








