அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அடையாளம் காணப்படாத அசாதாரண வானியல் நிகழ்வுகள் (UAP/UFO) தொடர்பான இதுவரை வெளியிடப்படாத இரகசிய ஆவணங்களை அமெரிக்க போர் திணைக்களம் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது.
“Presidential Unsealing and Reporting System for UAP Encounters (PURSUE)” எனப்படும் இந்த புதிய திட்டத்தின் கீழ், வெள்ளை மாளிகை, தேசிய நுண்ணறிவு இயக்குநர் அலுவலகம் (ODNI), எரிசக்தி துறை (DOE), All-domain Anomaly Resolution Office (AARO), NASA, FBI மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புதிய இணையதளமான WAR.GOV/UFO மூலம் அணுகக்கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கோப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் பல துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மூல ஆவணங்கள் தற்போது எந்தவித அனுமதியும் இன்றி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க போர் செயலாளர் Pete Hegseth தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த UAP தொடர்பான ஆவணங்கள் பல்வேறு சந்தேகங்களையும் ஊகங்களையும் உருவாக்கியுள்ளன. தற்போது அமெரிக்க மக்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அவற்றை காணும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தேசிய நுண்ணறிவு இயக்குநர் Tulsi Gabbard கூறுகையில், “அமெரிக்க மக்களுக்கு அரசின் UAP தொடர்பான தகவல்களில் நீண்டகாலமாக வெளிப்படைத்தன்மை தேவையாக இருந்தது. இந்த வெளியீடு தொடர்ச்சியான ஆவண வெளியீட்டின் முதல் கட்டமாகும்” என தெரிவித்தார்.

FBI இயக்குநர் Kash Patel, “வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க மக்கள் அரசின் UAP ஆவணங்களை தடையின்றி அணுகுகின்றனர்” என குறிப்பிட்டார்.
அதேவேளை NASA நிர்வாகி Jared Isaacman, “அறிவியல் ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள NASA தொடர்ந்து செயல்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க அரசின் UAP/UFO தொடர்பான வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளிப்படைத்தன்மை முயற்சியாக பார்க்கப்படுகிறது.









