இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வாகக் கருதப்படும் “சங்கமம் 2026” கின்னஸ் உலகச் சாதனை முயற்சி எதிர்வரும் 2026 ஜூன் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, இலங்கையின் கலாசாரப் பெருமையை சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்டவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த “சங்கமிழ் லியா விடுமுறைச் சேவைகள்” மற்றும் இந்தியாவைச் சேர்ந்த “சங்கமம் உலகக் கல்வியகம்” ஆகியவை இணைந்து இந்த பிரம்மாண்டமான கின்னஸ் சாதனை முயற்சியை ஏற்பாடு செய்துள்ளன.
தென்னிந்தியாவில் அண்மையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இந்த உலகச் சாதனை முயற்சியை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டு உலகச் சாதனை படைக்கவுள்ளனர்.
நிகழ்வு 2026 ஜூன் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு உலகச் சாதனை முயற்சியாக மட்டுமல்லாமல், இலங்கை – இந்திய நட்புறவு, கலாசார ஒற்றுமை மற்றும் கலைப் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் கலை மரபை சர்வதேச ரீதியில் வலுப்படுத்தும் இந்த நிகழ்வை பொதுமக்களும் ஊடகங்களும் நேரில் கண்டு களிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.








