அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், திட்டமிட்ட வகையில் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விசாரணைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூன்று நாட்களிலேயே அதன் பலவீனங்களை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் தாம் மட்டும் அரசாங்கத்தின் குறைகளை வெளிப்படுத்தியதாகவும், தற்போது முழு நாட்டும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் காரணமாக, பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு வாக்குமூலம் வழங்குமாறு தொடர்ந்து அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புகள் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.








