வாழைச்சேனை சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்திற்கு வழமையாக கழிவுகளை அகற்றச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதை கண்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், யானை ஏற்கனவே உயிரிழந்திருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் யானையின் சடலத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குப்பை மேடுகளில் உணவு தேடி வரும் வன யானைகள் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.









