மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை காரணமாக நீதித்துறை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், வே. இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த முறைப்பாடு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் சுதந்திரம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், ஜனாதிபதி 2026 மே 25ஆம் திகதி வழங்கப்படவுள்ள ஒரு நீதித்துறை தீர்ப்பு குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாகவும், தீர்ப்பு வெளியாகிய பின்னர் மக்கள் அதை “கைதட்டி வரவேற்கலாம்” என கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கருத்துகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முன்கூட்டியே அறிவு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, நிர்வாகத் தலையீடு குறித்த சந்தேகங்களை எழுப்புவதாகவும், நீதித்துறை நடுநிலையின்மீது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பு வெளியாகும் முன்பே அதன் முடிவை ஒத்ததாகக் கருதக்கூடிய கருத்துகள் வெளியிடப்படுவது, தீர்ப்பில் வெளிப்புற செல்வாக்கு இருக்கலாம் என்ற நியாயமான அச்சத்தை உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கருத்துகள் நீதித்துறை சுதந்திரத்தையும் அதன் நம்பகத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என இலங்கை சட்டவாளர் சங்கம் முன்பே கவலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பு நீதித்துறை சுதந்திரத்தை அடிப்படை அமைப்பின் முக்கிய கூறாக அங்கீகரிப்பதுடன், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 14ஆவது பிரிவு நியாயமான விசாரணையை உறுதி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐநா அடிப்படை கோட்பாடுகள் அரச அதிகாரிகள் நீதித்துறையில் தலையிடாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கருத்து நேரடித் தலையீடு அல்ல எனினும், அது அனைத்துலக தரநிலைகளின் அடிப்படையில் முறையற்ற செல்வாக்காக கருதப்படக்கூடும் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








