நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் 2019 முதல் 2026 ஏப்ரல் வரை நிலக்கரி கொள்முதல் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு ஆறு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க வரும்வரை ஆணைக்குழு காத்திருப்பதாகவும், “சம்பிக்க, அஜித், மரிக்கார், சானக்க வருவதில்லையா?” என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் தாங்கள் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு மூன்று மாதங்களில் அறிக்கையை வெளியிடும் எனவும், அதன்போது தமது தரப்பினர் விடுதலை பெறுவார்கள் என்றும், முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் சிறைக்கு செல்லுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறான கருத்துகள், ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதன் நீதிபதிகளின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார்.
அதனால், அந்த ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ரில்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பகுதி குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரை சுமார் 54 வீதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.








