கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய ஏழு பிரதான மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க, 2025ஆம் ஆண்டில் இலங்கையர்களில் 34 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களாக வருபவர்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது மேலும் 34 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி கடந்த ஆண்டில் மொத்தம் 68 நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையிலிருந்து யானைக்கால் நோயை முழுமையாக ஒழிப்பதே இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாட்டில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்நோய் சிறப்பாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார்.








