தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படும் புதிய வகை இராட்சத டைனோசர் இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
“நாகடைட்டன்” (Nagatitan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், சுமார் 27 மீற்றர் நீளமும் 27 டன் எடையும் கொண்டது எனவும் இது ஒன்பது ஆசிய யானைகளின் எடைக்குச் சமமானது என்பதுடன், நீண்ட கழுத்தைக் கொண்ட தாவர உண்ணி இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
தாய்லாந்தின் செயாபுமம் மாகாணத்தில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட பாறைப் படிமங்களைக் கொண்டு, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 100 முதல் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினம், பிரபலமான டி-ரெக்ஸ் டைனோசரை விட இரண்டு மடங்கு பெரியதாகும்.
தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ‘நாகா’ மற்றும் கிரேக்க புராணங்களின் ‘டைட்டன்’ ஆகிய பெயர்களை இணைத்து இதற்கு நாகடைட்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் இளைய பாறைப் படிமங்களில் இது கண்டறியப்பட்டதால், இதனை அந்தப் பிராந்தியத்தின் “கடைசி டைனோசர்” என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.
ஏனெனில், இதற்குப் பிந்தைய காலப்பகுதியில் அந்தப் பிரதேசம் ஆழமற்ற கடலாக மாறியதால், இனி வரும் காலங்களில் இதைவிடப் புதிய டைனோசர் எச்சங்களைக் கண்டெடுப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.
பூமியின் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருந்த காலத்தில், இவ்வளவு பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்ட விலங்குகள் எவ்வாறு உயிர்வாழ்ந்தன என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தேடல் பெரிதும் உதவுவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.








