ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை (18) நடைபெற்றன.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில், மாவட்ட போதைப்பொருள் முன்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதீப் களுபான மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வீதியால் சென்ற முச்சக்கர வண்டிகளை நிறுத்தி, ‘போதைப்பொருள் விற்கின்ற, அதற்கு அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்’ எனும் தொனிப்பொருளிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இத்தேசிய செயற்திட்டத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், நாட்டின் வளமான எதிர்காலத்தைக் கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் வாழ்வைச் சீரழிக்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக ‘1818’ என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு; “மக்கள் மத்தியில் இருந்து போதைப்பொருள் பாவனைக் கலாசாரத்தை அகற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்குள் கொண்டுவரப்படும் ஆபத்தான போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டாலும் அவர்களைக் கைது செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது” எனத் தெரிவித்தார்.










