உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார பேரவை, அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையில், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று (18) ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இம்மாநாட்டின் தலைவராக டொமினிகன் குடியரசின் டாக்டர் விக்டர் எலியாஸ் அட்டல்லா லாஜாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்கு ஆதரவு வழங்கும் நாடான சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் பாம்-ஷ்னீடர் (Elisabeth Baume-Schneider) மற்றும் சிறப்பு விருந்தினரான கானாவின் ஜனாதிபதி ஜோன் டிராமணி மஹமகே உள்ளிட்ட பல தலைவர்கள் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினர்.
“ஆரோக்கியத்திற்காக ஒரு உலகம்” (One world for Health) என்ற தொனிப்பொருளில் ஆரம்பமான இம்மாநாட்டுடன் இணைந்து, குழந்தைப் பருவ புற்றுநோய்க்கான WHO உலகளாவிய முன்முயற்சி (WHO GICC) ஏற்பாடு செய்த விசேட அமர்வும் நேற்று நடைபெற்றது.

“உயிர்வாழ்வை அளவிடுதல், முன்னேற்றமான மாற்றம் – குழந்தைப் பருவ புற்றுநோய்க்கான WHO உலகளாவிய முன்முயற்சியின் மூலம் சமபங்கு முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த அமர்வு நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தபட்சம் 60% ஆக அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இவ்வமரிவின் போது, குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான சமீபத்திய உலகளாவிய அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. இதில், உலகில் முதன்முறையாக குழந்தைப் பருவம் மற்றும் இளம்பருவ லிம்பாய்டு லுகேமியா (Lymphoid Leukaemia) நோய்க்கான 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் நாடுகள் ரீதியாக மதிப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள சுகாதார ஏற்றத்தாழ்வுகளையும், தரவு அமைப்புகளில் உள்ள இடைவெளிகளையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டின் தலைவரும், இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்த விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் பேசுகையில், “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும். குழந்தைப் பருவப் புற்றுநோய் வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பது எத்தனை குழந்தைகள் உயிர் பிழைக்கிறார்கள் என்பதில் மட்டுமல்ல, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அனைவருக்கும் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பானது, புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றுக்கான சேவைகளை சமமாக முன்னெடுப்பதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள், நாளமில்லா சுரப்பிகள் பாதிப்பு, கற்றல் சிரமங்கள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் சமூக-பொருளாதார அபாயங்கள் போன்ற நீண்டகாலப் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், இலங்கையிலுள்ள குழந்தைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் பராமரிப்புச் சேவைகளை வழங்க இலங்கை அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக மருத்துவ அதிகாரி சுகாதார சேவைகள் (MOH), பொது சுகாதார தாதியர் சேவைகள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஆரோக்யா நலன்புரி நிலையங்கள்’ ஆகிய திட்டங்கள் மூலம் சமூக மட்டத்திலான சுகாதாரக் கல்வி, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த WHO GICC திட்டம், தற்போது உலகம் முழுவதும் 87 நாடுகளில் செயல்பட்டு வருவதுடன், அதில் 50 நாடுகள் தங்களது தேசிய சுகாதாரக் கொள்கைகளில் குழந்தைப் பருவப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டை உள்ளடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








