யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராகப் பணியாற்றி வந்தவரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வலயக் கல்வித் திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது. இந்நிலையில், தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் அதே பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளில் ஒரு தரப்பினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது, “மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே!”, “அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன? அதிகாரிகளே பதில் சொல்!” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில், வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட மனு ஒன்று, பாடசாலையின் தற்போதைய பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மறுபுறம் நிலவும் முரண்பட்ட பின்னணி:
இதேவேளை, குறித்த அதிபரின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அடங்கிய மற்றொரு தரப்பினர், இந்த அதிபரை உடனடியாகப் பாடசாலையிலிருந்து இடமாற்ற வேண்டும் எனப் பல வருடங்களாக உரிய கல்வி அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர். இவர்களின் புகார்களின் அடிப்படையிலேயே, கல்வித் திணைக்களத்தினால் குறித்த கடமை நிறைவேற்று அதிபருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது; “இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபருக்கு ஆதரவான தரப்பினர் மட்டுமே. ஆனால், கிராமத்தில் உள்ள மற்றொரு தரப்பினர் இந்த அதிபருக்கு எதிராகப் பல கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவர் மீண்டும் பாடசாலைக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.








